ஆபத்தை விளைவிக்கும் ‘நில்லு நில்லு சேலஞ்சை’ யாரும் மேற்கொள்ள வேண்டாம் என கேரளா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னர் ஒரு காலத்தில் ‘ஐஸ் பக்கெட்’ சேலஞ்ச் இணையத்தில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து ஃபிட்னஸ் சேலஞ்சும் இணையத்தை கலக்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கிகி சேலஞ்ச் இணையத்தில் பிரபலமானது. கிகி சேலஞ்ச்படி, ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடிய படியே முன்னேற வேண்டும். இதனை ஆடிய பலரும் அதனை வீடியோவாக தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர். இந்த நடனத்தால் விபத்து ஏற்படும் என்பதால் யாரும் கிகி சேலஞ்ச்சில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதனையும் மீறி கிகி சேலஞ்ச் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் கேரளாவில் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ பிரபலமாகி வருகிறது. எனவே இந்த சேலஞ்சை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என கேரள போலீசார் தற்போது அறிவுறுத்தியுள்ளனர். அது என்ன ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ என கேட்கிறீர்களா..? கடந்த 2004-ஆம் ஆண்டு ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ என்ற மலையாள படம் வெளியானது. இப்படத்தில் ‘நில்லு நில்லு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. பாடலை ஜேசி கிஃப்ட் பாடியிருந்தார். படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இப்பாடல் பிரபலமாகி வருகிறது. இப்பாடலுக்கு தான் கேரள மக்கள் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ மேற்கொண்டு வருகின்றனர். இளம் வயதினரே பெரும்பாலும் இந்த சேலஞ்சில் ஈடுபடுகின்றனர்.
சேலஞ்ச்படி, வண்டியில் செல்பவர்களை இடையில் மறிக்கும் நான்கைந்து பேர் கொண்ட கும்பல் அவர்களின் முன்னால் ‘நில்லு நில்லு’ பாடலுக்கு நடமானடுகின்றனர். நடமானடும்போது கையில் இலைகளை வைத்துள்ளனர். இல்லையென்றால் டூவிலரின் ஹெல்மெட்டை அணிந்தபடி அவர்கள் நடனமாடுகின்றனர். மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை மறித்தும் அவர்கள் இதுபோன்று நடமானடுகின்றனர். தனியாக செல்பவர்களை மறித்தும் சிலர் நடனமாடுகின்றனர். பெரும்பாலும் குதித்து, குதித்து இந்த நடனத்தை அவர்கள் தொடங்குகின்றனர்.
இதனை வீடியோகவாக எடுத்து டிக்டாக் ஆப்பில் சிலர் பதிவிடுகின்றனர். அதனை ரசிக்கும் பலரும் தாங்களும் அதுபோன்ற சேலஞ்சில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவிடுகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது. நடிகர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் தனது படத்திற்காக மற்றொரு நடிகருடன் இணைந்து இதுபோன்று நடனமாடியிருந்தார். இந்த வீடியோவைத் தொடர்ந்தே இந்த சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் இதுபோன்ற சேலஞ்சில் ஈடுபட வேண்டாம் என கேரள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், ‘ முதலில் இருசக்கர வாகனங்களை தடுத்து அதன் முன் ஆட்டம்போட்டனர். இப்போது நான்கு சக்கர வாகனம் முன்பும் இதேபோன்று ஆடுகின்றனர். இளைய தலைமுறையினர் ஆபத்தை உணராமல் இதனை மேற்கொள்கின்றனர். திடீரென்று வண்டியின் பிரேக் பிடிக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர். காமெடிக்காக செய்வது உயிரையே பறித்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்” என கூறியுள்ளனர். அத்துடன் வீடியோ மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
Tags
India