அசைவ உணவு உண்பவர்கள் மீனை பெரும்பாலும் அவர்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அசைவ உணவை தவிர்ப்பவர்கள் மீனின் சுவையில் நீள கத்திரிக்காய் பிரட்டல் செய்து உண்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறமுடியும். இனி எப்படி இந்த சைவ மீன் பிரட்டல் செய்யலாம், அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சைவ மீன் பிரட்டல் செய்வதற்கான பொருட்கள்:
- கத்திரிக்காய்
- தேங்காய் எண்ணெய்
- நிலக்கடலை
- எள்
- மிளகாய்த்தூள்
செய்முறை:
மிகவும் இளசாக இருக்கும் பச்சை, வெள்ளை அல்லது ஊதா நிற கத்திரிக்காயை அரை கிலோ அளவுக்கு எடுத்துக்கொண்டு உப்பு நீரில் போட்டு நன்றாக அலசி கழுவ வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எள் மற்றும் நிலக்கடலை 50 கிராம் அளவு தனித்தனியாக எடுத்துக் கொண்டு தனித்தனியாக இளம் தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் மைய பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் கழுவி வைத்துள்ள கத்திரிக்காயை நீள வாக்கில் வெட்டி வாணலியில் போடுவதற்கு முன்னால் வாணலியில் தேங்காய் எண்ணெய் 100 மில்லி அளவு ஊற்றி லேசாக சூடு ஆனவுடன் முழுமையாக போடவும். பின்னர் கத்திரிக்காய் நன்றாக எண்ணெயில் வேகும் அளவு வதக்கி விடவும். முடிந்தவரை தண்ணீர் ஏதும் சேர்க்காமல் தேங்காய் எண்ணையில் வேகவைத்து எடுத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
10 முதல் 15 நிமிடங்கள் இவ்வாறு கத்திரிக்காயை நன்கு புரட்டும் பொழுது அதற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொண்டு ஒரு மூடியை வைத்து மூடி விடவும். குறைந்தது 5 நிமிடம் மூடியை மூடி வைத்துவிட்டு பின்னர் அதை மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கக் கூடிய அந்த எள், நிலக்கடலை பொடியை சேர்த்து நன்கு கலக்கி விடவும். இதனுடன் காரத்திற்கு தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
குறைந்தது 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிளகாய் தூள் வாசம் போகும் வரை நன்கு கிளறி விடவும். எண்ணெய் தேவைப்பட்டால் சிறிதளவு ஊற்றி கூட நீங்கள் பிரட்டலாம். இப்போது சூடான சுவையான சைவ மீன் பிரட்டல் தயார். இதனை நீங்கள் உங்கள் சாதத்தோடு அல்லது தனியாக சாப்பிட்டுப் பாருங்கள் சுவை உங்களை அள்ளிச் செல்லும்.