நடிகர் பாண்டியன், தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததே ஒரு ஏதேச்சையான சம்பவம்தான். இயக்குநர் பாரதிராஜா மதுரைக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில்தான் பாண்டியனை கண்டுபிடித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே வளையல் கடையில் இருந்த பாண்டியனை தனது மண்வாசனை படத்துக்கு ஹீரோ ஆக்கினார். முதல் படத்தில், நடிகை ரேவதி ஜோடியாக நடிக்க முதல்படமே செம ஹிட் படமாக பாண்டியனுக்க அமைந்தது.
அதன்பின் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே என 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் பாண்டியன். ரசிகர்கள் மனதிலும் நல்ல இடம் பிடித்தார். ரேவதி, ஊர்வசி, நளினி, இளவரசி என அப்போதைய முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடித்தார் பாண்டியன்.
சில படங்களில் 2 ஹீரோக்களில் ஒருவராகவும், சின்ன சின்ன கேரக்டர்களிலும் நடித்த பாண்டியன் அதிமுகவின் இணைந்து, திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். சினிமா வாய்ப்புகள் இழந்த நிலையில், கட்சி கூட்டங்களால் வருமானம் கிடைத்தது.
கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் குடிப்பழக்கத்துக்கு ஆளான பாண்டியன், நாளடைவில் சினிமா வாய்ப்புகளை இழந்தார். கடைசியாக, விசுவின் கைவந்த கலை படத்தில்தான் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் அவரை காண முடியவில்லை.
இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்ற மகனும் உள்ளனர். மதுரையில் பூர்வீக வீடு உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக, நுரையீரல் பாதிப்பால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாண்டியனுக்கு மஞ்சள் காமாலை நோயும் தாக்கியது.
தனது இறுதிகாலத்தில் நோய்வாய்பட்டு சிகிச்சை பலனின்றி 48 வயதில் உயிரிழந்தார் நடிகர் பாண்டியன். அவருக்கு மட்டும் குடிப்பழக்கம் இல்லாமல் நன்றாக நடிப்பில் கவனம் செலுத்தி இருந்தால், இப்போதும் ஒரு குணச்சித்திர நடிகராக பாண்டியனை தமிழ் சினிமா ரசிகர்கள் திரையில் பார்த்திருக்கலாம்.