உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர்கோயில் கர்நாடகா

உடுப்பி  நகரில் அமைந்துள்ளது  ஶ்ரீகிருஷ்ணரின்  இவ்வாலயம். ஶ்ரீகிருஷ்ணரின் வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் ஏந்தியுள்ளார். தன் கணவர் குழந்தையாக இருந்தப்போது, எப்படி இருந்தாரென  பார்க்க  ருக்மணிதேவியார்  ஆசைப்பட்டாராம். 

எனவே ருக்மணி தேவியார் வழிபட விஷ்வகர்மா  இந்த ஸ்ரீகிருஷ்ணரின் விக்ரகத்தை அமைத்தாராம்.  துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மணி தேவியார் வழிபட்ட இக் கிருஷ்ணர் விக்கிரகமும் கடலில் மூழ்கியது.  

ஐயாயிரம்  ஆண்டுகளுக்குப் பின்னர் அது மத்வருக்குக் கிடைத்து, மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணர் விக்ரகமே உடுப்பி ஆலய மூலவராகும்.

இக்கோயிலில் “மத்வ புஷ்கரிணி” என்னும் தீர்த்தமுள்ளது. சந்திர பகவான்  தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலமிது. தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும்,  அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றாராம். 

அப்போது சந்திரன்  அமைத்தத்  திருக்குளமே  “சந்திர புஷ்கரணி” எனப்படுகிறது. இவ்விடத்தில்  “நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன்  தவம் புரிந்ததால்” (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றானது.  பின்னர் அது  நாளடைவில் மருவி உடுப்பி என்றானது

 உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக  மத்வர் எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை ஏற்படுதினார்.

புதிய மடாதிபதி  பொறுப்பேற்கும் விழாவானது  “பர்யாய வைபவம்’  என்று  இங்கே   மிகச் சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவின் போது விறகுகளாலான தேர் அமைக்கப்படுகின்றது. இந்த விறகுத்தேர் பின்னர்  கோயிலின் சமையலுக்குப் பயன்படுகின்றது. இவ்வாலயத்தில் தினமும் அன்னதானம் அளிக்கின்றனர்.

இக் கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு. கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும். 

மற்ற நாட்களில் சந்நிதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே மிகவும் சக்தி வாய்ந்தரும்,  அழகு மிகுந்தவருமான  ஶ்ரீகண்ணபிரானைப் பக்தர்கள்  தரிசிக்க முடியும்.

சர்வவல்லமையுள்ள கண்ணபிரானே போற்றி! கீதையே அர்ஜுனனுக்கு உபதேசித்த, அதன்மூலம் உலக மக்களை நன்னெறிப்படுத்திய  கண்ணா!  மணிவண்ணா போற்றி போற்றி! ஏழைப் பங்காளனே மாதவா கோபாலா கிரிதரா! போற்றி! போற்றி! போற்றி!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …