கடல் சீற்றத்தால் 55 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 23ம் மற்றும் 24ம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தால் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி நகரமே அழிந்தது.
இந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்தக் கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளது.
ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்திகளை எடுத்துச் சொல்கிறது. வரலாற்று காலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி.
1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான புயல் நள்ளிரவு 12 மணிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான உயிரைப் பறித்தது மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அழித்தது.
சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் ஆடல் பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் உட்பட பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் சிக்கி உருத்தெரியாமல் இறந்தனர்.
கடலோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடிசைகளும் அழிந்து போயின. கோயில்களும் கட்டிடங்களும் தரையில் புதைந்தது.
ரயில் நிலையத்தில் இருந்த எஞ்சியவர்கள் நாட்டுப்படகில் மண்டபம் முகாமுக்கு தப்பிச்சென்றனர்.
தற்போது இடிந்து போன சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலில் எச்சங்களாய் தற்போது அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டுகின்றன.
1964 க்கு பிறகு ஆள் அரவமற்ற தீவாக காட்சியளிக்கிறது. மனிதர்கள் வசிக்க தகுதியற்ற இடமாக அரசு இதனை அறிவித்தது.
20 வருடங்களுக்குப் பிறகு அகதிகளின் வருகை பாதுகாப்பு துறையின் கண்காணிப்பு என பதட்டமான பிரதேசமாக தனுஷ்கோடி மாறியது. அச்சுறுத்தல் இருப்பினும் பல நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தற்போதும் தனுஷ்கோடியில் தான் உள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிறந்த கட்டிடங்களையும் அடிப்படை வசதி இன்றி அல்லல்படும் அப்பாவி மீனவர்களின் வாழ்க்கை துயரத்தையும் மனதில் இன்னும் சுமந்து கொண்டுதான் செல்கிறார்கள்.
தனுஷ்கோடிக்கு ரூ 55 ஆயிரம் கோடி செலவில் புதிதாக முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை மத்திய அரசு சாலை போட்டது. இது 2017 ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் 27 ஆம் தேதி ராமேஸ்வரத்துக்கு வருகைதந்த பிரதமர் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அரிச்சல்முனை வரை செல்கிறது. இவற்றைப் பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் தற்போது புயலின் சிதைவுகளை பார்த்து கனத்த இதயத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.