மொச்சை, கொண்டைக்கடலை யோடும் பூசணிக்காய் கலந்து கூட்டு செய்வதால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் எளிதில் கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட நீர் இருந்தாலும் அது பிரிந்து வெளியே சிறுநீராக செல்லும். இந்த கூட்டினை உண்பதன் மூலம் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படா.து உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்து அதிகளவு கிடைக்கும் அப்படிப்பட்ட இந்த கூட்டினை செய்யக்கூடிய விதத்தில் இனி பார்க்கலாம்
தேவையானவை:
நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி – ஒரு கப்
வெந்த துவரம்பருப்பு – அரை கப்
உலர்ந்த மொச்சை – 50 கிராம்
கறுப்பு கொண்டைக்கடலை – 50 கிராம்
புளித் தண்ணீர்
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள்தூள்
உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
தனியா – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துருவிய தேங்காய் – அரை கப், எண்ணெய் – சிறிதளவு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, தேங்காய் துருவல் – கால் கப், தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
உலர்ந்த மொச்சை, கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவிட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு வடிக்கவும். பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு வடிக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெந்த பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்த்து மேலும் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும்.