கிராமத்தில் உறவுகள் எல்லாம் ஓன்றாக கூடி இருக்கும் சமீபத்தில் அனைவரும் சேர்த்து சமைத்து உண்ணும் அருமையான உணவு தான் இந்த கூட்டாஞ்சோறு. இதனை கூடி உண்பதால் கூட்டாஞ்சோறு என்று பெயர் பெற்றது. சூடாக அனைவரும் சேர்த்து சாப்பிட இதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது தான் உண்மை. அப்படி பட்ட இந்த கூட்டாஞ்சோறினை எப்படி செய்யலாம் என்பதை காணலாம்.
தேவையானவை:
அரிசி – 200 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு, வாழைக்காய் – ஒன்று, கத்திரிக்காய் – 4, இளம் முருங்கைக்காய் – ஒன்று, அவரைக்காய் – 10, வெள்ளை முள்ளங்கி – ஒன்று (இவற்றைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்), முங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, நெய், எண்ணெய் – தலா 2 டீஸ்பூன், கடுகு – சிறிதளவு.
வதக்க: நாட்டுத் தக்காளி – 3 (நறுக்கவும்), நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்.
வறுத்து அரைக்க:
தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய் – அரை மூடி (சிறிய மூடி போதும்… துருவிக்கொள்ளவும்), சின்ன வெங்காயம் – 4, நாட்டுத் தக்காளி – ஒன்று.
செய்முறை:
அரிசியுடன், துவரம்பருப்பு, கொஞ்சம் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அகலமான மண்சட்டி (அ) அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து விழுதாக்கவும்.
அதே மண்சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கவும்.
இத்துடன் நறுக்கிய காய்கள், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து, முக்கால் பதமாக வெந்த பின் புளிக்கரைச்சல், தேவையான உப்பு, மஞ்சள்தூள், அரிசி – பருப்பு கலவை சேர்க்கவும்.
பின்னர், அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். நெய்யை காயவிட்டு, கடுகு தாளித்து, கூட்டாஞ்சோறில் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.