புளி, தினசரி உணவில் இடம் பெறும் முக்கிய பொருள். புளியின் தளிர் இலை மருத்துவ குணம் நிறைந்தது. கீரையை போல இளம் புளிய இலைகளை கொண்டு கூட்டு சமைத்து சாப்பிடும் வழக்கம் இன்னும் சில கிராமங்களில் காணப்படுகிறது.இதனை தான் புளியந்தளிர் பருப்புக் கூட்டு என்பார்கள்.
தேவையானவை:
புளியந்தளிர் – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 2 பல்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
குழம்பு வடகம் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு.
செய்முறை:
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாயை கீறிக்கொள்ள வேண்டும்.
வெந்த துவரம்பருப்புடன் புளியந் தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் குழம்பு வடகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
அசாத்திய சுவையும் உடலுக்கு நல்ல ஆரோக்கியமான உணவாக இது இருப்பதால் நீங்களும் ஓரு முறை இதனை செய்து சுவையுங்கள்.