தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தரமான படங்களில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பை அளித்து வருகிறார் நடிகை பூர்ணா.
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 இப்பொழுது தெலுங்கில் தடபுடலாக ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், ஆம், சினிமாவிற்கு வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன் என்று கூறியிருக்கிறார். தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் பூர்ணா, கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் பரபரப்பானது.
சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா அளித்துள்ள பேட்டியில், ‘‘பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. வளர்த்துவிட்ட ரசிகர்கள் சொல்லும் நேர்மறை, எதிர்மறை கருத்துகளை ஒரே விதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சில எதிர்மறை கருத்துகளை வைத்து என்னை நான் மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வந்தன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை. நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும். ஷோபனா, ரேவதி, சுஹாசினி மாதிரி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்தேன்.
சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என்றார்.