நானா புலுக்கு ( Nana Buluku ) இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது.
குறிப்பாக சமீபத்தில் வெளியான நானா புலுக்கு என்ற பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்த பாடலில் கவர்ச்சி நடிகை காவியா தாபார் கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாடலின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள நானா புலுக்கு என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று ரசிகர்கள் பலரும் குழம்பித்தான் போனார்கள்.
இந்நிலையில் இது குறித்த தகவல் தற்போது இணையப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, மேற்கு ஆப்பிரிக்க மக்களால் வணங்கப்படக்கூடிய ஒரு தெய்வமாம் இந்த நானா புலுக்கு.
சூரியனின் ஆவியான லிசா மற்றும் சந்திரனின் ஆவியான மாவு மற்றும் இந்த உலகம் அண்ட சராசரங்களை பெற்று எடுத்த தாய் தான் நானா புலுக்கு என்று மேற்கு ஆப்பிரிக்க மக்கள் நம்புகிறார்கள்.
பல்வேறு மேற்கு ஆப்பிரிக்கர்கள் நானா புலுக்கு-வை கடவுளாக வணங்குகிறார்கள். ஆனால், சிலர் அவரை வணங்குவதை விடுத்து அவர் படைத்த, அவரிடம் இருந்து தோன்றிய துணைக்கடவுள்களை வணங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகம், சூரியன், சந்திரன், பால்வெளி, அண்ட சராசரம் ஆகியவற்றை விடவும் அதிக வயதானவராக நானா புலுக்கு நம்பப்படுகிறார். மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து நானா புலுக்கு உலகம் முழுதும் பரவிய கதை இன்னும் சுவாரஸ்யமானது.
காலணித்துவ ஆதிக்கத்தில் அமெரிக்கா பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தியது. அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவையும் அடிமைப்படுத்தி அங்கிருந்து மில்லியன் கணக்கான மேற்கு ஆப்பிரிக்கர்களை கைது செய்து அடிமைப்படுத்தினர்.
அதன் பிறகு அவர்களை கரும்பு பருத்தி மற்றும் புகையிலை சார்ந்த விவசாய வேலைகள் செய்வதற்காக உலகம் முழுதும் அனுப்பினார்கள். அப்படி அவர்களை அனுப்பும் பொழுது அவர்கள் தங்களுடன் தங்களுடைய நம்பிக்கையான நானா புலுக்கு பற்றிய தங்கள் மத சார்ந்த கருத்துக்களை உலகம் முழுதும் பரப்பினார்கள்.
இப்படித்தான் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து நானா புலுக்கு உலகம் முழுதும் பரவினார். ஆனால், தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் படத்தின் மூலம் தமிழக சினிமா ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறார். இந்த பாடலை கவிஞர் விஜய பாரதி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.