தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை’ – அமைச்சர் சி.வெ.கணேசன் விளக்கம்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில், அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்துவந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர்.

அதேபோல மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ இரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச்சட்டங்கள் கடைபிடிக்கப்படுவது துறை மூலமாக உறுதிசெய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக்கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாடு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும், இந்த உடலுழைப்புத் தொழிலாளர் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான அமைதியான சூழலில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான சில செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.

தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்ல மாநிலத் தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Exit mobile version