சரண்யா பொன்வண்ணன், (Saranya Ponvannan)தமிழ் சினிமாவில் 1980-90களில், முன்னணி நாயகியாக ஒருவராக வலம் வந்தார். இப்போது, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மா வாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய நாயகன் படம்தான், இவர் அறிமுகமான முதல் படம். அதுவும், கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் அற்புத வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில், முக்கிய ஹீரோக்களுடன் ஹீரோயினாக சரண்யா நடித்தார்.
மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, சகலகலா சம்பந்தி, தாயம் ஒண்ணு, அஞ்சலி, சிவப்பு தாலி, உலகம் பிறந்தது எனக்காக, கோட்டை வாசல், நான் புடிச்ச மாப்பிள்ளை, கருத்தம்மா, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில், முக்கிய கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் சரண்யா இடம்பிடித்தார்.
இடையில், சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த சரண்யா, பின், தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆனார். இளம் வயதை கடந்து, மத்திம வயதில் இருந்ததால், அம்மா கேரக்டர்களில் நடிக்கத் துவங்கினார்.
ஜீவா அம்மாவாக ‘ராம்’ படத்திலும்,, சேரன் அம்மாவாக ‘தவமாய் தவமிருந்து’, பரத் அம்மாவாக ‘எம்டன் மகன்’, தனுஷ் அம்மாவாக ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் கொடி, விமல் அம்மாவாக ‘களவாணி’, விஷால் அம்மாவாக ‘நான் சிகப்பு மனிதன்’ விஜய் சேதுபதி அம்மாவாக ‘தென்மேற்கு பருவக்காற்று’, உதயநிதி ஸ்டாலின் அம்மாவாக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, சிவகார்த்திகேயன் அம்மாவாக ‘ரெமோ’ என பல படங்களில், ஹீரோக்களுக்கு அம்மாவாக பிஸியாக நடித்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன். அதிலும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில், நயன்தாரா அம்மாவாக நடிப்பில் விஸ்வரூபம் காட்டி இருப்பார் சரண்யா.
எம்டன் மகன், தவமாய் தவமிருந்து படங்களில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருதும், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் பெற்றிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.இவரது கணவர் பொன்வண்ணன், அவரும் நடிகர் மற்றும் இயக்குநர். பருத்தி வீரன் படத்தில், பிரியாமணி தந்தையாக நடித்திருப்பார்.
இதுதவிர பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்தவர்.சமீபத்தில் ஒரு நேர்காணலில், பொன்வண்ணன், தன்னை திருமணம் செய்துகொள்வது குறித்து, பேசிய சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார் சரண்யா.
நான் வீட்டில் இருந்த போது, ஒருமுறை பொன்வண்ணன் போன் செய்தார். அப்போது, நான் ஒரு படம் பண்றேன், அதுக்கு உங்களோட கால்ஷீட் ஒரு 70 வருஷம் வேண்டும் என்று கேட்டார். எவ்வளவு நாள் வேண்டும் என்று கேட்டதற்கு, ‘எனக்கு 70 வருஷம் வேண்டும்’ என்றார். அப்படி அவர் சொன்னவுடன் ஏதோ புரிந்தது போல தோன்றியது.
நீங்கள் என்ன பேசறீங்கன்னு புரிந்துதான் பேசறீங்களா? என கேட்டேன். ‘புரியாமல் கூட யாராவது பேசுவார்களா?’ என கேட்ட அவர், ‘நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால், ;நன்றாக இருக்கும், என்று தோன்றியதால் கேட்டேன். யோசித்து சொல்லுங்கள். சம்மதம் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. நான் உங்களை லவ் செய்கிறேன்.
அதனால், நான் தற்கொலை எல்லாம் செய்துகொள்வேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். விருப்பமா, இல்லையா என்று மட்டும் யோசித்து சொல்லுங்கள்,’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.பிறகு என் அப்பாவிடம் இதுபற்றி கூறிய நான், வேலை எதுவும் இல்லாமல் எனக்கு போன் செய்து உளறுகிறார் போலிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் வந்து பேச மாட்டார்.
என்னை பார்த்து சிரிக்க கூட மாட்டார். எப்படி இவருக்கு என்னை பிடித்துப்போனது என்றே தெரியவில்லை என்று கூறினேன், என்று இந்த பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் கூறி இருப்பது, இப்போது வைரலாகி வருகிறது.