மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தற்போது மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள ‘தி ப்ரீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘மாராக்கர்’, ‘ஜாக் அண்ட் ஜில்’, ‘காயட்டம்’, ‘9 எம்.எம்’ உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மஞ்சு வாரியர். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
பலரும் அவருடைய எதார்த்தமான நடிப்பைப் பாராட்டி இருந்தார்கள். தற்போது இந்தி திரையுலகிலும் அறிமுகமாகிறார் மஞ்சு வாரியர். மாதவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அமெரிகி பண்டிட்’. புதுமுக இயக்குநர் கல்பேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு போபாலில் நடைபெற்று வருகிறது.
இதில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.நாகர்கோவிலில் பிறந்திருந்தாலும், இதுவரை நேரடி தமிழ் படங்களில் அதிகம் நடிக்காத மஞ்சு, ஹீரோயினை மையமாக வைத்து இயக்குனர் அறிவழகன் எடுக்கும் படத்தின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திரில்லர் வகையில் உருவாகும் அந்த படத்துக்கான வேலைகள் இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்கள் வாழ்க்கையில், ஆதிக்கம் செலுத்திய ஆண் யார் என்று கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், எல்லோர் வாழ்க்கையில் தந்தைக்கு சிறந்த இடம் உண்டு.
எனக்கும் என் அப்பாதான் எல்லாம். என் வாழ்க்கையில் அதிக செல்வாக்கான மனிதரும் ஆதிக்கம் செலுத்தியவரும் அவர்தான். அவர் இழப்பு என்னால் தாங்கிக்கொள்ள முடியாதது. நிவர்த்தி செய்ய முடியாதது என்றார்.