உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு ஒரு அட்டகாசமான ரெசிபியை இன்று உங்கள் வீட்டில் செய்யுங்கள். அது தான் வறுத்தத்த காளான் குழம்பு. இந்த குழம்பை சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். காளான் அசைவ உணவுகளின் சுவையைக் கொடுப்பதால், மதிய வேளையில் இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பாராட்டு நிச்சயம் !!
உங்களுக்கு வறுத்தரைத்த காளான் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைத்த காளான் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் – 1 கப் (நறுக்கியது)
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு:
* தேங்காய் – 1 கப்
* கறிவேப்பிலை – 1 கையளவு
* பட்டை – 1 இன்ச் துண்டு
* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை முதலியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொண்டு பின்பு குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு காளானை சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், வறுத்தரைத்த காளான் குழம்பு தயார். சுவைத்து மகிழுங்கள் !!