கோகர்ண நாதேஸ்வரர் 2 லட்சம் சதுர அடிகளைக் கொண்ட இந்த கோவில் சலவை கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுர அமைப்பு, தமிழக கோவில்களின் கோபுர தோற்றத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் தேவி அன்னபூரணியின் சிலை தங்கத்தால் உருவாக்கப்பட்டது. கல்வியும் கலைத் துறையும் மேம்படுவதற்காக இந்த கோவிலில் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கோவிலில் மூலவருக்கு நடத்தப்படும் ‘சர்வ மத மகாருத்ர அபிஷேகம்’ என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ருத்ர மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இந்த அபிஷேகத்தை செய்வதால் ‘ருத்ராபிஷேகம்’ என்று அழைக்கின்றனர். இந்த அபிஷேகத்தை அனைத்து மதத்தினரும் செய்யலாம். ஜாதி, மத பேதங்கள் இல்லாமல் கோகர்ண நாதேஸ்வரரை அனைவரும் வழிபடலாம். இந்த அபிஷேகத்தை செய்வதன் மூலம் நோய்கள் நீங்கி, எதிரி பயம் இல்லாமல் வாழலாம் என்பது நம்பிக்கை.
தல வரலாறு
தெற்கு கர்நாடகாவின் ஒரு சிறிய பகுதியாக துளுநாடு இருந்து வந்தது. இந்த இடத்தில் பில்லவ இன மக்கள் வசித்து வந்திருந்தனர். ஜாதி மத வேறுபாடு காரணமாக இந்த மக்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்ற சட்டம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தது. பல போராட்டங்களுக்கு பின்பும் இவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அந்த சமயத்தில் நாராயண குரு என்பவர் கேரளாவில் பக்தி இயக்கம் நடத்தி வந்திருந்தார்.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கடவுளை வணங்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் இவரது தலைமையிலேயே 301 கோயில்களை கட்டி முடித்தார். இவர் கட்டிய கோவில்களில் ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து மத மனிதர்களும் இறைவனை சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் பில்லவ இனமக்கள் இவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இவரது ஆலோசனையின்படி தான் 1912 ஆம் ஆண்டு குத்ரோலியில் கோகர்ண நாதேஸ்வரர் சிவன் கோயில் கட்டப்பட்டது.
இந்த கோவிலில் கோகர்ண நாதேஸ்வரர், அன்னபூரணி, மகா கணபதி, சுப்பிரமணியர், கால பைரவர் நவக்கிரகம், சனீஸ்வரர், நாராயணகுரு சன்னிதி என அனைத்து தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து ஆரத்தி செய்யும் வழிபாட்டினை ‘சர்வ சேவை’ என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர். இந்தக் கோவிலில் ஆஞ்சநேயருக்கு என்று தங்கத்தாலான தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ள இந்த கோவிலில் மகாலட்சுமி, சரஸ்வதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பலன்கள்
குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் தோஷம் ஏதேனும் இருந்தாலும், கலைத்துறையில் சிறப்பாக விளங்க வேண்டும் என்றாலும் அதற்கான சிறப்பு வழிபாடுகள் இந்த கோயிலில் நடத்தப்படுகிறது. பிணிகள் நீங்கவும், எம பயம் நீங்கவும், எதிரி பயம் நீங்கவும் இங்கு உள்ள கோகர்ண நாதேஸ்வரரை வழிபடலாம். சுவாமிக்கு நைவேத்யமாக எள், நெய், வெல்லம், பச்சைப்பயறு பொடி, ஏலக்காய் கலந்த பஞ்ச கசாயம், பிரசாதமாக படைக்கப்படுகிறது.
செல்லும் வழி
மங்களூரு ரயில் நிலையத்திலிருந்து, பீச் சாலையில் 3கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.