வீட்டில் உள்ள கணினி அலைபேசியில் அதிக அளவு தங்களது நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிச்சயமாக ஒரு விதமான மன இறுக்கத்தில் வளர்க்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் நாம் பதிவு செய்ய விரும்புகிறோம்.
பெற்றோர்கள் அனைவரும் சிறிதுநேரம் அமர்ந்து அல்லது உணவு அருந்தும் போது அனைவரும் ஒன்றாக உணவு அருந்தி அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பது போன்ற பொதுவான விஷயங்களை குழந்தைகளோடு கலந்து பேசும் போது தான் அவர்களுக்கு பெற்றோர்களிடையே ஒரு நெருக்கம் ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்று உள்ள காலகட்டத்தில் அனைவரும் பணிக்கு செல்வதால் நேரத்தை செலவிடுதல் என்பது முடியாத விஷயமாகவே உள்ளது. எனினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களிடமும், குழந்தைகளிடமும் பாசத்தைக் காட்டி அவர்களை வெளியே அழைத்துச் சென்று வந்தால்தான் அவர்களுக்கு குடும்பம் என்ற கட்டுக்கோப்பு கலையாமல் அன்பு, பாசம் போன்ற அனேக குணங்கள் மிக நன்றாக வளரும் என்று கூறலாம்.
தன் வயதையொத்த குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் வெளியே சென்று விளையாட ஏதுவாக இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று தனித்தனி குழந்தைகளாக ஒவ்வொருவரும் வீட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒவ்வொரு செல்போன்களை வைத்துக் கொண்டு விளையாடுவது அதிகரித்து வருகிறது.இது அவர்களுக்கு மூளை தடுமாற்றம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே பெற்றோர்கள் விடுமுறை நாட்களில் வெளியே சென்று குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது அவசியமான ஒன்றாகிறது. சிறிது நேரம் புட்பால், பேஸ்கட் பால் போன்றவற்றை வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொடுப்பதன்மூலம் அவர்கள் உடல் வியர்க்க விளையாட முடியும். இதனால் அவர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
அதுபோல குழந்தைகளை மண்ணில் விளையாட அனுமதியுங்கள். மண்ணில் விளையாடுவதால் எந்தவிதமான கேடுகளும் ஏற்படுவதில்லை. மாறாக உடலுக்கு எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்கும். இதனை உணர்ந்து செயல்படுங்கள் மண்ணில் விளையாடினால் சொறிசிரங்கு வரும் என்பது போன்ற விஷயங்களை அவர்கள் திணிக்காதீர்கள்.
இனி வருகின்ற கோடைவிடுமுறையில் அவர்களை எங்கு வெளியே சுற்றுலா அழைத்துச் செல்லலாம். பகல் பொழுதை எப்படி கழிக்கலாம். எந்தெந்த வகையில் அவர்களுக்கு வெளியில் விளையாட கற்றுக் கொடுக்கலாம் என்பதை பெற்றோர்கள் திட்டமிடுவது அவசியமான நேரமாகிவிட்டது.