குழந்தை ரூபத்தில் ஐயப்பன் குளத்துப்புழையில் இருக்கும் கோவிலில் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலை குளத்துப்புழை சாஸ்தா கோயில் என்று அனைவரும் அன்போடு அழைப்பதோடு இங்கிருக்கும் சாஸ்தாவை பால சாஸ்தா என்று கூறுகிறார்கள்.
மேலும் பெயருக்கு ஏற்றபடி இந்தக் கோயிலுக்குள் நுழையக்கூடிய நுழைவாயிலானது ஒரு சிறு குழந்தை நுழையும் அளவிற்கு உள்ளது. கேரளாவில் அமைந்திருக்கும் இந்த கோயில் ஐயப்பன் அருள் புரிகின்ற முக்கிய கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.
இதற்கு காரணம் இந்த கோயிலில் இருக்கக்கூடிய பால சாஸ்தாவின் விக்ரகமானது பரசுராமனால் நிறுவப்பட்டது என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது. மேலும் இந்த கோயிலில் சிவன், யக்ஷி, விஷ்ணு, கணபதி, பூதநாதர், கருப்பசாமி போன்ற தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.
இக்கோவிலானது கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் தாலுக்கில் அமைந்துள்ளது. கேரளாவில் இருக்கும் 108 ஐயப்பன் திருத்தலங்களில் இந்த தலமும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த கோயிலானது பந்தல அரசால் உருவாக்கப்பட்டது.
மேலும் ஆரம்ப நாட்களில் இந்த கோயில் கொட்டாங்கரையைச் சேர்ந்த அந்தணர் ஒருவரால் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து கொட்டாங்கரை அரசரின் கைவசம் இருந்த கோயில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டுக்கு மாற்றப்பட்டது.
இந்தக் கோயிலை ஒட்டிய பகுதியில் கல்லிடை ஆறு ஓடுகிறது. குளத்துப்புழை ஐயப்பனின் அழகை மயங்கிய மச்சக்கன்னி அவரை திருமணம் செய்ய விரும்பியதாகவும், அதை ஐயப்பன் மறுத்து விட்டதாகவும் செவி வழி செய்திகள் உள்ளது.
இதனை அடுத்து அந்த மச்சக்கன்னி அந்த தலத்தில் ஓடும் ஆற்றில் மீன்னாக இருக்கும் படி அருளியதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த மச்சக்கன்னி இன்னும் அந்த ஆற்றங்கரையில் மீனாக வாழ்வதாக நம்பிக்கை நிலவி வருகிறது.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்கிருக்கும் யக்ஷி அம்மன் சன்னதியில் தொட்டிலை கட்டி வர குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
மேலும் இக்கோயிலில் ஏப்ரல் மே மாதங்களில் விஷு மகா உற்சவம் நடைபெறும். சித்திரை ஐந்து முதல் 14ஆம் தேதி வரை இந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த கோவிலில் இருக்கும் மீன்களுக்கு பொரியினை போடுவதன் மூலம் நமது வேண்டுதல்கள் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இன்று வரை நிலவி வருகிறது.