ஆரம்ப நாட்களில் நமது முன்னோர்கள் அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிக அளவு சேர்த்து வந்தார்கள். இந்த தானியங்களின் மூலம் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் உடல் வலிமையும் கிடைத்தது.
இதன் மூலம் நீண்ட நாட்கள் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு நோய் நொடி எதுவும் ஏற்படாமல் இருந்தது. அந்த வகையில் இன்று கிராமத்தில் செய்யக்கூடிய சிறுதானிய கூட்டாஞ்சோறு செய்யும் முறை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சிறுதானிய கூட்டாஞ்சோறு செய்ய தேவையான பொருட்கள்
1.சாமை அரிசி ஒரு கப்
2.நெய் 3 டேபிள் ஸ்பூன்
3.இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
4.சோம்பு பொடி அரை டீஸ்பூன்
5.புதினா ஒரு கைப்பிடி அளவு
6.பச்சை மிளகாய் 3 7.ஏலக்காய் ஒன்று,
8.மஞ்சள் ஒரு சிட்டிகை 9.நாட்டு காய்கறிகள் ஒரு கப்
10.வெங்காயம் இரண்டு 11.தக்காளி இரண்டு
12.உப்பு தேவையான அளவு
13.மஞ்சள் பொடி கால் சிட்டிகை
செய்முறை
முதலில் நாட்டு காய்கறிகளான கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், மாங்காய், சுரைக்காய் போன்றவற்றில் ஒவ்வொரு துண்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை கழுவி நீள வாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தை உரித்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனோடு தக்காளியும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
சாமை அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து கொள்ளவும். இதை அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து குக்கர் சூடானதும் நெய்யை ஊற்றி அதில் ஏலக்காய், சோம்பு பொடி, இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பச்சை வாசனை நீங்கிய பிறகு இதனோடு புதினா, தக்காளி நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் இவற்றை எல்லாம் போட்டு நன்கு வதக்குங்கள். இதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நாட்டு காய்கறிகளை இதனோடு சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு மீண்டும் நல்ல முறையில் கிளறி விடுங்கள்.
இனி நீங்கள் எடுத்து வைத்திருக்கும் சாமை அரிசியை இதனோடு சேர்த்து போதுமான அளவு நீரை விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டால் போதுமானது இப்போது கிராமத்து சுவையில் சிறப்பாக இருக்கும் கூட்டாஞ்சோறு தயார்.