இராஜமௌலி இயக்கிய பாகுபலி, இரண்டு பாகம் படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகமாக தயாராகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் ரிலீஸ் இரண்டாம் பாகம் படங்களின் எண்ணிக்கை மொத்தம் 10 ஆக இருப்பது, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இரண்டரை மணி நேரம் மட்டுமே, படம் பார்க்க ரசிகர்களுக்கு பொறுமை இருக்கிறது. அதனால் பெரும்பாலான படங்களின் காட்சி நேரம் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம்தான். அதற்கு மேலும், படத்தை நீட்டித்தால், படம் ரொம்ப நீளம் என, ரசிகர்களே கிண்டலடித்து விடுகின்றனர்.
ஆனால், கருப்பு வெள்ளை சினிமா காலத்தில், மூன்றரை மணி நேரம், நான்கு மணி நேரம் ஓடும் எல்லாம், படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள கொட்டகைகளில் இரவு 10.30 மணிக்கு படம் திரையிட்டால், விடியற்காலைதான், ரசிகர்கள் வீடு வந்து சேருவார்கள்.
ஆனால், அந்தளவுக்கு ரசிகர்களுக்கு இன்று பொறுமை இல்லை. அதனால்தான், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, எம்ஜிஆர் படமாக்க ஆசைப்பட்டும், பெரிய சரித்திரக் கதை என்பதால் எடுக்க முடியவில்லை.
ஆனால், இன்று அந்த அஸ்திரத்தை கையில் எடுத்து, வெற்றிகண்டவர் இயக்குநர் ராஜமௌலி. அவர்தான், பாகுபலி படத்தை பாகம் 1 பாகம் 2 என, இரண்டு பாகங்களாக வெளியிட்டார். படத்துக்கு அமோக வரவேற்பும், வெற்றியும் கிடைத்தது.
இதற்கு முன்பு, தமிழில் இயக்குநர் ஹரி சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என படம் எடுத்திருந்தாலும், அது தொடர்ச்சியான ஒரே கதையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல்தான் லாரன்ஸ் தொடர்ச்சியாக நடித்த காஞ்சனா படமும் வந்தது.
பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து, இப்போது பல படங்கள் இரண்டாம் பாகமாக வெளிவருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, பிச்சைக்காரன் 2, டீமாண்டி காலனி 2, தலைநகரம் 2, சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, விடுதலை 2, சார்பட்டா பரம்பரை 2, கரகாட்டக்காரன் 2 என பத்து படங்கள், இரண்டாம் பாகமாக வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.