தூதுவளை
தூதுவளை அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகை. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல தமிழ் பெயர்கள் உண்டு. இந்தியாவில் பெரும்பாலும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை உணவில் சேர்த்து கொள்வதால் இது உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும் தன்மை கொண்டது.
தூதுவளையில் உள்ள சத்துக்கள்
- கால்சியம்
- இரும்பு சத்து
- வைட்டமின் ஏ
- நீர் சத்து
- புரதச்சத்து
தேவையான பொருட்கள் :
- முள் நீக்கிய தூதுவளை இலை – ஒரு கைப்பிடி,
- மிளகு – ஒரு டீஸ்பூன்,
- துவரம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
- பச்சரிசி – ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 1,
- பெருங்காயம் – சிறிதளவு,
- புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
- மஞ்சள்தூள் – 2 சிட்டிகை,
- கடுகு – அரை டீஸ்பூன்,
- உப்பு – தேவையான அளவு,
- நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்.
தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.
தூதுவளை செரிமான சம்பந்தமான கோளாறுகளையும் தீர்த்துவிடும். இது தூதுவளையின் மற்றொரு சிறப்பு. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அவ்வப்போது இக்குழம்பை செய்து தரலாம்.