நாவூறும் வான் கோழி பட்டர் மசாலா..! – எப்படி செய்வது..? – வாங்க பாக்கலாம்..!

என்னதான் வாரா வாரம் சிக்கன், மட்டன், மீன் அப்படினு விதம் விதமா சாப்பிட்டாலும், புதுசா ஏதாச்சும் செஞ்சு வெளுத்து கட்டணும்னு தோணுற ஆசைக்கு மட்டும் அணை போடவே முடியாது. சரி விடுங்க எதுக்கு தடை போடணும், சமைக்க தெரியலனா என்ன, நாங்க சொல்லித்தாறோம். கத்துக்கிட்டு அசத்துங்க! முதல்ல தேவையான பொருள்லாம் என்னென்னனு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  1. வான்கோழி கறி – 1 கிலோ
  2. வெங்காயம் -1 (சிறுதுண்டாக நறுக்கியது)
  3. தக்காளி – 4 (பொடி பொடியாக நறுக்கியது)
  4. முந்திரி (அல்லது பாதாம்) – 10
  5. இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
  7. தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன் (தேவைபட்டால்)
  8. கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி
  9. ஃப்ரெஷ் க்ரீம் (அல்லது ஹெவி க்ரீம்) – 1/4 கப்
  10. வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி சீரகம் பொடி – 1 1/2 தேக்கரண்டி
  12. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  13. கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
  14. தயிர் – 1/4 கப்
  15. எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  16. உப்பு – சுவைக்கு ஏற்ப
  17. கொத்தமல்லி தழை – அழகுபடுத்த
  18. வெண்ணெய் – 2 டீஸ்பூன்
  19. எண்ணெய் – 2 டீஸ்பூன்

பட்டர் வான்கோழி கறி செய்வது எப்படி?

வான்கோழி கறியை நன்றாக மஞ்சள் தூள் போட்டுக்கழுவி கொள்ளுங்கள்.

சிறிது உப்பு, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கசூரி மேத்தி, இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து அதனுடன் வான்கோழி கறியை ஊறவையுங்கள்.

குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஊற விடவும்.

உதவிக்குறிப்பு:-

இந்த மசாலா பொருட்களை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை என்றால் மசாலாப் பொருட்களுக்கும் பதிலாக 2 டீஸ்பூன் தந்தூரி சிக்கன் மசாலா பொடியை கடையில் வாங்கி பயன்படுத்தலாம்.

நன்கு ஊறிய பிறகு, சிறிதளவு எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி வான்கோழிக்கறியை மிதமாக வறுக்கவும். அதை இறக்கி வைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணையைச் சேர்த்துச் சூடாக்கி, வெங்காயத்தை வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆற விடவும்.

கை பொறுக்கும் சூட்டிற்கு குளிர்ந்த பிறகு, எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு முந்திரி பருப்புடன் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்ட்ரைனர் வழியாக வடிகட்டி மகானி சாஸ் தயார் செய்துக்கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் சேர்த்து உருக விடவும். தயாரிக்கப்பட்ட மகானி சாஸைச் சேர்த்து, உலர் பருப்புகளை சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.

அடுத்து ஊறவைத்த வான்கோழிக்கறி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், தேவையான உப்பு மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவற்றைச் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும், இதனால் சுவைகள் நன்றாக இணையும்.

இறுதியாக நசுக்கிய கசூரி மேத்தி மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். ப்ரெஷ் கிரீம் சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்.

நறுக்கிய கொத்தமல்லி அல்லது சிறிது கிரீம் கொண்டு அலங்கரித்து, புலாவ், நான், ரொட்டியுடன் பரிமாறவும். இது அனைத்துக்கும் ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …