மார்ச் 25 தேதி(நாளை) க்குள் செங்கல்பட்டு கோர்ட்டில் நேரில் ஆஜராகாவிட்டால், நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த், தமிழ் சினிமா நடிகையாக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, கடமையைச் செய், ஜாம்பி, பாம்பாட்டம், மணியார் குடும்பம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து, பிரபலமானவர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில், மாமல்லபுரம் சென்றனர். காரை, யாஷிகா ஆனந்த் ஓட்டியுள்ளார்.
மாமல்லபுரம் அருகே, குளேரிக்காடு என்ற இடத்தில், கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், யாஷிகாவின் தோழில வள்ளிச்செட்டி பவணி உயிரிழந்தார். ஆண்நண்பர்கள், யாஷிகா பலத்த காயமடைந்தனர்.
மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, மூவரும் உயிர் பிழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து, சினிமா வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், காரை ஓட்டிய யாஷிகா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், காரை ஓட்டியது நான்தான் என்றும், அதிவேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என்றும், சீட் பெல்ட் அணியாததால், வள்ளிச்செட்டி பவணி காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதால், பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வழக்கு, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு மார்ச் 25ம் தேதி (நாளை) க்குள் யாஷிகா ஆனந்த், கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்.
அவ்வாறு ஆஜராகாத பட்சத்தில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோர்ட்டில் நேரில் ஆஜராவாரா, அல்லது யாஷிகா ஆனந்த் கைது செய்யப்படுவாரா என்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.