நாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்?



தங்கப் பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. தங்கப் பத்திரம் என்றால் என்ன? இதை யாரெல்லாம் வாங்கலாம்? இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் ஆதாயம் என்ன? விரிவான விவரங்களை பார்க்கலாம்.

தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க சிலர் விரும்புவார்கள். இது போன்றவர்களை இலக்காக வைத்து 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் தங்கப் பத்திரத் திட்டம். இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி விலையேற்ற பலனை பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது. அதன்படி இந்த மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனை நடைபெறும்.

இதையடுத்து அக்டோபர் 23ம் தேதி முதல் பத்திர வினியோகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி வரை மாதந்தோறும் தங்க பத்திர விற்பனை நடைபெறும். தனி நபர் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராமிலிருந்து அதிகபட்சம் 500 கிராம் எடைக்கு இணையான தங்கப் பத்திரங்களை வாங்கலாம். தற்போதைய விற்பனையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 146 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்து தொகையை செலுத்துபவர்கள் இதில் 50 ரூபாய் தள்ளுபடியும் பெற முடியும். வங்கிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அஞ்சலகங்களில் இப்பத்திரங்களை பொது மக்கள் வாங்க முடியும். இந்த பத்திரங்களை 8 ஆண்டுகளுக்கு பிறகு அரசிடம் திரும்பத் தந்து அப்போதைய தங்கத்தின் விலையை பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு இரண்டரை சதவிகித வட்டியையும் அரசு தருகிறது. தேவைப்பட்டால் 5 ஆண்டுகளில் கூட பத்திரத்தை திரும்பத் தந்து அப்போதைய தங்கத்தின் விலையை பெறலாம். தங்கத்தின் விலையை நீண்ட கால நோக்கில் கவனித்து பார்க்கும் போது அது தொடர்ந்து உயர்ந்து வருவது உறுதியாகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்வு பலனுடன் இரண்டரை சதவிகித வட்டியும் கிடைப்பதால் இது ஆதாயம் மிகுந்த திட்டம் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். அரசினால் வழங்கப்படும் திட்டம் என்பதால் இது நம்பகத்தன்மை மிக்கது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.