அமேசான் நிறுவனத்திற்கு எதிராக அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஐரோப்பா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பெரிதாக வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப உலகமும் வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் ஷாப்பிங் என நாகரிக உலகம் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் என ஏராளமான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் நாள்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் போதும் தள்ளுபடியை போட்டி போட்டுக் கொண்டு தருகிறார்கள். எப்படி இவ்வளவும் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கிறது என ஆச்சர்யமாக இருக்கும்.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன் லைன் வர்த்தகத்தில் தற்போது உச்சத்தில் உள்ளது. யாரும் செல்ல முடியாத இடங்களிலும் சென்று பொருட்களை வழங்கி வருகிறார்கள். அதற்கேற்றார்கள் மற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள். தனக்கென உலகின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்கள். நகரங்களில் திரும்பும் திசையெங்கும் அமேசான் போன்ற நிறுவனங்களில் ஊழியர்கள் வாகனங்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில், தங்களுக்கு உரிய வசதிகள் இல்லை என கூறி அமேசான் ஊழியர்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக ஐரோப்பாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அமேசான் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது அலுவலகங்களை விட்டு வெளியேறி போராட்டத்தில் குதித்துள்ளனர். தாங்கள் ஒன்றும் ரோபோக்கள் இல்லை என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
ஸ்பெயின் நாட்டின் நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனி மற்றும் பிரிட்டனில்தான் அமேசானுக்கு அதிக சந்தை உள்ளது. பிரிட்டனிலும் அமேசான் அலுவலங்களுக்கு முன்பு போராட்டங்கள் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களிலும் அமேசான் ஊழியர்களின் போராட்டம் எதிரொலித்தது.
இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அமேசான் நிறுவனம் கூறுகையில், “இந்தப் போராட்டங்களால் ஐரோப்ப வர்த்தகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. தடங்கல் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது. சில யூனியன்களை சேர்ந்தவர்கள் தான் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஐரோப்பாவில் மட்டும் 2010 ஆம் ஆண்டு முதல் எங்களுடைய நிறுவனம் 27 பில்லியன் யூரோ அளவிற்கு முதலீடு செய்துள்ளது. 75 ஆயிரம் பேருக்கு நிரந்தமாக வேலை உருவாக்கியுள்ளது” என தெரிவித்துள்ளது.